×

கொரோனா காரணமாக 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ஹாங்காங் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: ஹாங்காங் – சென்னை – ஹாங்காங் இடையே 4 ஆண்டுகள் பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில், வர்த்தகத் துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹாங்காங் – சென்னை – ஹாங்காங் இடையே ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. இந்த விமானம் சென்னையில் இருந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளுக்கு செல்லும் இணைப்பு விமானமாகவும், தொழில்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியான விமானமாகவும் இருந்தது.

இந்நிலையில், 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் விமான சேவையை தொடங்க முன்வந்தது. அதன்படி வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த விமானங்கள் இயக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு ஹாங்காங்கிலிருந்து விமானம் நேற்று அதிகாலை 1 மணிக்கு 103 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

அதன்பின்பு விமானம் மீண்டும் 129 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் விரைவில் தினசரி விமானமாக, வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட இருப்பதாகவும், இந்த விமான சேவை 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில், வர்த்தகத் துறையினர் மிகுந்த பயனடைவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா காரணமாக 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ஹாங்காங் – சென்னை கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான சேவை நேற்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதையொட்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சென்னை விமான நிலைய இயக்குனர் சிவி தீபக், குத்துவிளக்கு ஏற்றி, கேக் வெட்டி புதிய விமான சேவையை தொடங்கி வைத்தார்.

The post கொரோனா காரணமாக 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ஹாங்காங் – சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Hong Kong ,Chennai ,Corona ,Hong Kong… ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...